அரச தலைவர்களின் வாசஸ்தலமாக இருந்த ‘விசும்பாய’, உயர் ரக ஹோட்டலாக மாறுகிறது

🕔 July 7, 2023

– முனீரா அபூபக்கர் –

ரச தலைவர்கள் பலரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இருந்த ‘விசும்பாய’ – உயர் ரக ஹோட்டலாக (Boutique Hotel) மாற்றப்படவுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அசோடெல்ஸ் ஹொஸ்பிடாலிட்டி லிமிடெட் (Azotels Hospitality Limited) ஆகிய நிறுவனங்களுக்கிடையில் இன்று (07) கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஹொங்கொங் அசோடெல்ஸ் ஹொஸ்பிட்டாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அட்ரியன் செச்சா (Adrian Zecha) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விசும்பாய கட்டிடம் 50 வருட குத்தகை அடிப்படையில் அசோடெல்ஸ் ஹொஸ்பிட்டாலிட்டி லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹுனாஸ் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட், ஜப்பானின் பார்ட்னர் சூட் ஆகியவற்றுடன் இணைந்து இதை ஒரு உயர் ரக ஹோட்டலாக அசோடெல்ஸ் ஹொஸ்பிட்டலிட்டி லிமிடெட் நடத்தும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம், பழமைக்கு சேதம் ஏற்படாத வகையில் பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்களை முதலீடு செய்யும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான்தான் விசும்பாய கட்டிடம் உயர் ரக ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணத்தை செலவழிக்காமல் தனியார் மற்றும் பொது பங்களிப்புடன் இவ்வாறான புராதன கட்டிடங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர்தர ‘போட்டிக்’ ஹோட்டலாக (Boutique Hotel) இது உருவாக்கப்படும். மேலும் உயர்தர சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான ஆடம்பர அறைகள், பொதுவான பகுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றையும் இந்த ஹோட்டல் கொண்டிருக்கும்.

1835 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி காலனித்துவ காலத்தில் மன்னர் வில்லியம் என்பவரால் கட்டப்பட்ட இந்த கட்டிடம், இலங்கை ரைபிள் படைப்பிரிவின் அதிகாரிகளின் தங்குமிடமாக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டு கட்டிடக்கலைப்படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் முதலில் அக்லாண்ட் ஹவுஸ் (Acland House) என்று அழைக்கப்பட்டது. கொழும்பு நகரின் மத்தியில் உள்ள புராதன மதிப்புள்ள கட்டிடம் என்றும் இதனை கூறலாம்.

1971 ஆம் ஆண்டு, இந்தக் கட்டடம் – அரச சொத்தாக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

இதேவேளை, இந்த பிரமாண்டமான கட்டிடத்தை தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக மாற்றிய அரசியல்வாதிகளும் உள்ளனர். சிறிமாவோ பண்டாரநாயக்க, டி.எம். ஜயரத்ன, அனுருத்த ரத்வத்த, லக்ஷ்மன் கதிர்காமர், மங்கள சமரவீர, பேராசிரியர் ஜி, எல். பீரிஸ் போன்ற அமைச்சர்கள் இந்த பிரமாண்டமான கட்டிடத்தை தமது உத்தியோகபூர்வ இல்லமாக அவ்வப்போது தெரிவு செய்திருந்தனர்.

இந்தக் கட்டடம் பல ராஜதந்திர தலைவர்களின் தற்காலிக தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி இலங்கை வந்தபோது விசும்பாயவில் தங்கியிருந்தார்.

விசும்பாய கட்டிடத்தின் தனித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஹோட்டல் உருவாக்கப்படும்.

விசும்பாய முற்றத்தில் உள்ள பெரிய இடம் வெளிப்புற கச்சேரிகள் மற்றும் திருமணங்களுக்கு ஒதுக்கப்படும்.

நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில நடைபெற்ற மேற்படி ஒப்பந்த நிகழ்வில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி. பிரியஷாந்த, ஹுனாஸ் ஹோல்டிங் நிறுவனத் தலைவர் தனுக சமரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்