மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

🕔 June 30, 2023

மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 14.2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், மாதாந்த நிலையான கட்டணத்தை, 400 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மின்சார கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான யோசனை ஒன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு – மின்சார சபையிடம் முன்வைத்திருந்தது.

எனினும், அந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகியதையடுத்து, குறித்த கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் நிலவியது.

இந்த சிக்கல் தொடருமானால், தற்போது அமுலில் உள்ள கட்டணத்தை திருத்தம் இன்றி தொடர்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்திருந்தது.

இந்தநிலையில், அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்தே, மின்சார கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்