சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது

🕔 June 27, 2023

– பாறுக் ஷிஹான் –

புலனாய்வுகளின் போது, சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்தாமலும் அடிப்படை உரிமையை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.வலியுறுத்தினார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி கல்முனை பிராந்தியத்தலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு கல்முனை பொலிஸ் தலைமை நிலையத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்று (26) இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இந்தனைக் கூறினார்.

கல்முனை பிராந்திய நிலையத்திற்குட்பட்ட ஐந்து பொலிஸ் நிலையங்களிலுள்ள உயர் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில்;

“எமது நாட்டில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு செல்லும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் குடும்பத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குடும்பச் சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் சமூகத்தில் உள்ளவர்களின் வறுமை கல்வியறிவின்மை போன்ற காரணங்களினாலும் நாளுக்கு நாள் பொலிஸ் நிலையங்களில’ முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் புலனாய்வுகளின் போது சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவாக நடத்தாமலும் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

”1994 ம் ஆண்டின் 22ம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்தரமான நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கு எதிரான சமவாய சட்டம் ஒன்றை இலங்கை அரசு உள்வாங்கி அதனை 20.12.1994 இல் அத்தாட்சிப்படுத்தியது.

சிறுவர் பாலியல் தொந்தரவுகள் பாலியல் பலாத்காரங்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டாலும் அவற்றில் சில – நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது.

இதனால் தப்புச் செய்கின்றவர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர். இதற்கு சாட்சிகள் முன்வராமை, சமூகத்தின் ஏளனமான பார்வை – ஆதாரங்கள் அழிக்கப்படல் என்பவைகள் வழக்கொன்றை தொடர்வதற்கு பலமற்ற விடயங்களாக இருக்கின்றன.


எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல் தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும். இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டுள்ளது.

சித்திரவதைகளைக் கட்டுப்படுத்த பாரிய பங்களிப்பைச் செய்கின்ற இடம்தான் நீதவான் நீதிமன்றம். இங்குதான் ஆரம்ப கட்டத்தில் அதிகமானோர் வருகின்றனர். அதில் சிறு தொகையினரே உயர் நீதிமன்றம் செல்கின்றனர்.

இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் மூன்றாம் பிரிவின பதினோராம் உறுப்புரையில் உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ ஒரு மனிதனை சித்திரவதை செய்வது அடிப்படை உரிமை மீறல் எனவும் ஒருவரை தொல்லைக்கு உட்படுத்துவது துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது.

ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில் சித்திரவதை பற்றிய மருத்துவ ரீதியான கருத்துக்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் நிகழ்த்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்