தீய செயல்களுக்கு மாணவர்களை இட்டுச் செல்பவை என்ன: மாணவர்கள் முன்னிலையில் நீதவான் ஹம்ஸா விளக்கம்

🕔 June 16, 2023

– றிபாஸ் –

குடும்ப நிலமை, வறுமை, கெட்ட நண்பர்களின் சகவாசம் போன்றவை – மாணவர்களை தீய செயல்களுக்கு இட்டுச் சென்றமையை, தனது நீதிமன்ற அனுபவங்களின் மூலம், அறிய முடிந்துள்ளதாக – அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சமூதாய சார் சீர்திருத்த திணைக்களத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற ‘போதைப் பொருள் பாவனை தடுப்பு’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பாடசாலை அதிபர் ஏ.பீ. முஜீன் தலைமையில் நேற்று (15) இந்த நிகழ்வு இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“ஒவ்வொரு மாணவரிடத்திலும் தனியான திறமையும் ஆற்றலும் லட்சியமும் காணப்படுகின்றன. அவற்றைச் சிதைக்கின்ற செயற்பாடுகள் மிக கச்சிதமாக செயற்படுத்தப்பட்டு வருவதையறிந்து பல சந்தர்ப்பங்களில் நான் கவலைப்பட்டிருக்கின்றேன். பல நீதிமன்றங்களில் மாணவர்களை சந்தேக நபர்களாக முன்னிலைப்படுத்துகின்ற போது – அவர்களுடன் உரையாடியிருக்கின்றேன். அவர்களது குடும்ப நிலமை, வறுமை, கெட்ட நண்பர்களின் சகவாசம் போன்றன அவர்களை தீய செயல்களுக்கிட்டுச் சென்றிருப்பதை அப்போது அறிய முடிந்தது.

எனது பாடசாலை காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தியதனால் இன்று உங்கள் முன்னால், நான் நீதிபதியாக வந்துள்ளேன்.

உங்களில் பலர் வைத்தியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், பொறியியலாளர்களாகவும், நீதிபதிளாகக் கூட வர முடியும். அதை சிதைப்பதற்கு ஒரு குழுவினர் செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் அதனால் வரும் அபாயத்தைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

லட்சியத்தை உருவாக்குங்கள்

ஒவ்வொரு மாணவரும் லட்சியமுடையவராக இருக்க வேண்டும். லட்சியமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையல்ல. ஒவ்வொருவரும் பெரும் கனவுகளை காண வேண்டும். இருக்கின்ற லட்சியத்தை அடைவதற்கு அந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இவ்வாறான அபாயங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

எனவே உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான தடைக்கற்களை இனங்கண்டு, உங்கள் லட்சியத்தை முன் நோக்கி நகர்த்துவதற்கு திட்டமிட்டு செயற்பட வேண்டும். லட்சியமில்லாத வாழ்வு ‘அச்சாணியற்ற தேர்’ போன்றது. ஒருவர் லட்சியத்தோடு பயணிக்காமல், மனம் போன போக்கில் வாழ்வது – நடைப்பிணத்துக்கு ஒப்பானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

லட்சியத்தையடைகின்ற பயணத்தில் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். அப்போதெல்லாம் துவண்டுவிடாமல் மன உறுதியோடு நமது செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்திச்செல்ல அர்ப்பணிப்போடு கருமமாற்ற வேண்டும்.

பின்வரிசையிலிருக்கின்ற மாணவர்கள் எனக்கு கணிதம் ஏறாது, ஆங்கிலம் வராது என்கிற எண்ணம் இருந்தால் அவற்றை இன்றுடன் விட்டுவிடுங்கள். பல பின் வரிசை மாணவர்கள்தான் இன்று பெரும்பெரும் பதவிகளில் இருக்கிறார்கள்.

முட்டாள் மூலை’களில் அறிஞர்கள் உருவானார்கள்

‘முட்டாள் மூலை’யென்று அழைக்கப்பட்ட பின்வரிசை மூலையில் கல்விகற்ற பேர்னாட்ஷா பிற்காலத்தில் அறிஞரென்று அழைக்கப்பட்டார். அதேபோன்று தோமஸ் அல்வா எடிசன் போன்ற விஞ்ஞானிகளை அவதானித்தால் அவர்ளுடைய மாணவ பருவ செயற்பாடுகள் – அறிவு குறைந்தவையாகவே இருந்தன. ஆனால் பிற்காலத்தில் அவர்கள் சமூதாயத்துக்கு பயனுள்ளவர்களாகவும், அவர்களால் சமூகம் நண்மையடையக்கூடிய வகையிலும் பெரும் அறிஞர்களாக வளர்ச்சி பெற்றுயிருந்தார்கள்.

பெரும்பாலான மாணவர்கள் – நீதிமன்ற செயற்பாடுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானிக்கச்செய்கின்ற போது, எதிர் காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாதென்ற எண்ணமும், அச்சமும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உருவாகும். அதனால் பல்வேறு படிப்பினைகளை அவர்கள் பெறுவார்கள். மாணவர்கள் நீதிமன்ற கட்டமைப்பையறிந்து கொள்ளும் வகையில் நேரடியாகச் சென்று பார்ப்பதன் மூலம் – எவ்வாறான குற்றச்செயல்களுக்கு எப்படியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வார்கள்,

சீர்திருத்தப்பாடசாலை, சிறைச்சாலைகளில் வைக்குமாறு தண்டனை வழங்கப்படுதல், மரணதண்டனை விதித்தல் என்பவற்றை மாணவர்கள் நேரடியாக பார்க்கின்ற போது, குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற நிலையிலிருந்து விடுபட்டு – விலகி நடப்பர்.

மாணவர்களை குறி வைக்கும் போதை வியாபாரிகள்

அண்மைக்காலமாக எமது பகுதிகளில் மட்டுமல்ல இலங்கையின் பல பாகங்களிலும் போதைவஸ்து பாவனை – புற்று நோய்போன்று உருவெடுத்து சமூதாயத்தையும், குடும்பங்ளையும் சீரழித்துக்கொண்டிருக்கின்றது.

போதை மாபியா குழுக்களால் அல்லது வலைப்பின்னலால் மாணவர்கள்தான் இலக்கு வைக்கப்படுகிறார்கள். உங்களைதான் அவர்கள் தேர்வு செய்ய காத்துக்கொண்டிருக்கிரார்கள். இலகுவாக நீங்கள் அவற்றுக்கு அடிமையாகக் கூடிய வகையில் திட்டம் போட்டு செயற்படுகிறார்கள். இதனால் மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதோடு – போதை வியாபாரம் இலகுவாக அதிகரித்து சமூதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லுகின்றது.

பலர் பணம் சம்பாதிப்பதற்கு போதைவஸ்து வியாபாரத்தை ஒரு வருமான மூலமாக கையிலெடுத்துள்ளதால், நமது இளம் தலைமுறையினர் அதற்கு அடிமையாகி தமது வாழ்வை பலிகொடுத்து வருகிரார்கள்.

பல பேச்சாளர்கள் வந்து – நீதிமன்றத்தில் நடைபெறும் விடயங்களை கூறுவதை விடவும், ஒரு நீதிபதியாக உங்கள் முன் வந்து – பல விடயங்களை ஒப்பு வைக்கின்றேன். இதனை ஒரு படிப்பினையாக எடுத்து மாணவர்களாகிய நீங்கள் – எதிர்கால வாழ்வை வளமுள்ளதாகவும் உங்கள் குடும்பத்துக்கும், நீங்கள் வாழும் சமூதாயத்துக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து காட்ட, உங்களது படிப்பை மட்டுமே ஆயுதமாகக்கொள்ள வேண்டும்.

உங்களது லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். போதைவஸ்து மாபியாக்களால் சமூதாயத்தில் தோற்றுவிக்கப்படுகின்ற சட்ட விரோத செயல்களிலும், சமயத்துக்கு முரணான விடயங்களிலும் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து – வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பிரஜையாக உருவாவதற்கான ஏற்பாடுகளை பாடசாலைகளிலிருந்தே திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

போதைவஸ்து – சமூகத்தில் எந்தெந்த வடிவில் வருவதென்று எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது .டொபி , ஐஸ்கிறீம், மாத்திரை, தூள், குடிபானம் போன்ற வடிவங்களிலெல்லாம் உள்ன.

எனவே மாணவர்களும், இளைஞர்களும் மிக இலகுவாக இதில் அகப்பட்டு கொள்ளக்கூடிய நிலமை காணப்படுவது. நாம் எதிர் கொண்டுள்ள மிகவும் ஆபத்தான விடயம் இதுவாகும்” என்றார்.

நிகழ்வில் சமூதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகத்தர் ஏ.எம். நிசார், சேவைப் பரிசோதகர் எம்.எஸ். மொகம்மட் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்