நடிகர் சரத்பாபு காலமானார்

🕔 May 22, 2023

ந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததார்.

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக திரையுலகில் சரத்பாபு அறிமுகமானார்.

‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பின்னாட்களில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார்.

1979-ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே தனி அடையாளத்தை பெற்றுதந்தது. தவிர, ‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1980-ம் ஆண்டு பி. லெனின் இயக்கத்தில் உருவான ‘நதியை தேடி வந்த கடல்’ படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுடன் இணைந்து சரத்பாபு நடித்திருந்தார். இந்தப் படம் ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்பாபு நடித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்