“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

🕔 April 29, 2023

மெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர், திடீரென அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எடுத்தமை தமக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் இருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பிற விசாரணைகள் தமக்கு எதிராக தடையை விதிக்க காரணங்கள் என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் பரிந்துரைப்பது முறையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தடை

வசந்த கருணாகொட அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட, அவரது மனைவி ஸ்ரீமதி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் வசந்த கரன்னாகொட, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்திருந்தது.

ராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான திட்டத்தின் 2023 சட்டத்தின் 7031(C) பிரிவுக்கு அமைய, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலை

இதனையடுத்து இலங்கை அமெரிக்கா விதித்த தடைக்கு, இலங்கை அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டது.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை மிகுந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீண்டகால இரு தரப்பு பங்குதாரர் என்ற வகையில், அமெரிக்கா உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒருதலைபட்சமாக செயற்படுவது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்