‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய, தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்ததாக நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி இதுவரை கிடைக்கப்பெறாததால், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச்சீட்டுக்களை தபால் நிலையங்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.