உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

🕔 February 28, 2023

– சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் –

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பலரும் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல் மாத்திரமே. அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை.

தனியாக ‘உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு’ என்ற ஒன்று சட்டத்தில் இல்லை. உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டம் ( Local Authorities Elections Ordinance) பிரிவு 38(3) இன் பிரகாரம் ஏதாவது அவசரநிலை அல்லது விசேட சூழ்நிலையில் ஏற்கனவே குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலையில், தேர்தலுக்கான மற்றுமொரு திகதியை அறிவிக்கலாம்.

அத்திகதி ஏற்கனவே எத்தினத்தில் தேர்தலுக்கான திகதி பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டதோ (இம்முறை ஜனவரி 28ம் திகதியே – மார்ச் 09இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது) அவ்வறிவித்தல் வெளியான தினத்துக்குப் பின்னர் 21ம் நாளுக்கு முந்தியதாக இருக்கக்கூடாது. ( not earlier than the 21st day after the publication of the notice).

இங்கு தேர்தலுக்கான அறிவித்தல் மார்ச் 09 ம் திகதி என – ஜனவரி 28இல் அறிவிக்கப்பட்டது. எனவே 29ம் திகதியில் இருந்து கணக்கிடவேண்டும். அதன்படி பெப்பரவரி 18ம் திகதி 21ம் நாள் வரும். அதாவது தேர்தலுக்கான புதிய திகதி பெப்ரவரி 18ம் திகதியோ அல்லது அதற்குப் பிந்திய (போயா அல்லது பொதுவிடுமுறை தினம் தவிர்ந்த) எந்தவொரு நாளாகவும் இருக்கலாம்.

இதன் பொருள், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டபின் அத்திகதிக்கு முன்னராவோ பின்னராகவோ தேர்தல் நடத்தலாம்.

இப்பொழுது தேர்தல் அறிவிப்பு வந்து 21 நாள் கடந்துவிட்டது. எனவே, சில ஊடகங்கள் குறிப்பிடுவதுபோல் 21 நாள் ( உண்மையில் இடைவெளி 20 நாளே தேவை) இடைவெளி தற்போது தேவையில்லை. தேர்தலுக்கான புதிய திகதி 21 நாட்களைவிட குறைந்த இடைவெளியாக இருக்கலாம். அல்லது அதைவிட கூடுதலான இடைவெளியாக இருக்கலாம். அதிக காலம் எவ்வளவு இருக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பிடப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்