வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபாவை, தேடிச் சென்று ஒப்படைத்த தமிழ் இளைஞர்: நேர்மையை பாராட்டிய பொலிஸார்

🕔 February 21, 2023

– பாறுக் ஷிஹான் –

மிழ் இளைஞர் ஒருவர் வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபா  பணத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று – உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (21) இந்தப் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைப்புச் செய்வதற்காக நேற்று திங்கட்கிழமை வர்த்தகர் ஒருவர் 35 லட்சம் ரூபா பணத்தை எடுத்துச் சென்றிருந்தார்.

வங்கிக்குள் சென்று குறித்த தொகையை வைப்பிலிடுவதற்கு தயாரான நிலையில், அவர் கொண்டு வந்திருந்த பணத்தொகையில் ரூபா 5 லட்சம் ரூபா காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார்.

இந்நிலையில் இதனை வங்கி மேலாளருக்கு அறிவித்து விட்டு, வங்கியின் அருகில் இருந்த சிசிரிவி கமராவை அவதானித்துள்ளார்.

குறித்த  காணொளியில் தவறவிடப்பட்ட பணத்தை ஒருவர் எடுத்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு பணம் தொலைந்தமை பற்றி முறைப்பாடு செய்வதற்காக, பணத்தை தவறவிட்ட வர்த்தகர் வந்தார்.

அதே நேரம் பொலிஸ் நிலையத்துக்கு தான் கண்டெடுத்த பணத் தொகையுடன் – மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வந்தார்.

இதனையடுத்து பணத்தை தொலைத்தவர் பொலிஸார் முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து – கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக வழிநடத்தலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹிட்  முன்னிலையில் – அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

பணத்தை பெற்றுக்கொண்ட வர்த்தகர் – பணத்தை கண்டெடுத்து பொலிஸார் ஊடாக வழங்கிய இளைஞனை ஆரத்தழுவி நன்றிகளை தெரிவித்தார்.

பணம் தொலைந்து போனதையடுத்து தான் மிகுந்த  மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், குறித்த இளைஞன் தனது பணத்தை மீட்டுக்கொடுத்தமை மகிழ்சியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்காலகட்டத்தில் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், கண்டெடுத்த பெருந்தொகைப் பணத்தை ஒப்படைத்த இந்த இளைஞரின் நேர்மையினை நினைத்து பெருமைப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்