தலைப்புச் செய்திகள்

ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி

Uduve Thammaloga thero - 0873யானைக் குட்டிகளை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தேரர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்குச் சென்ற  ரகசியப் பொலிஸார், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக நேற்று இரவு வரை காத்திருந்ததாகத் தெரியவருகிறது.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான யானைக் குட்டியை, தேரரின் பெயரிலோ அல்லது விகாரையின் பெயரிலோ பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறாமல் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ரகசியப் பொலிசார் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.

இதேவேளை, தம்மாலோக தேரரரை ரகசியப் பொலிஸார் நேற்றிரவு கைது செய்யவிருந்ததாகவும், அதனாலேயே, அதற்கு முன்னதாக தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.