ஒரு மாதத்துக்கும் மேல், படகுடன் காணாமல் போயிருந்த நிலையில் திரும்பிய கடற்படையினருக்கு மருத்துவ பரிசோதனை
![](https://puthithu.com/wp-content/uploads/2022/10/Navy-023.jpg)
கடற்படைப் படகில் பயணித்த நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயிருந்த 06 கடற்படையினரும், இன்று (19) அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடற்படையினர் இன்று காலை பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் (செப்டம்பர் 17) கண்காணிப்புப் பணியொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேர் கொண்ட கடற்படைப் படகு, அதன் வானொலி தொடர்பை இழந்தது. அந்தப் படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து காணாமல் போன படகைக் கண்டுபிடிக்கும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காக மாலத்தீவு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளின் உதவியை இலங்கை நாடியது.
இந்த நிலையில் நேற்று (18) காலை காணாமல் போன படகிலிருந்த கடற்படையினர், தமது தொடர்பாடலை சரிசெய்து கடற்படைத் தலைமையகத்தைத் தொடர்புகொண்டனர்.