நாட்டின் கையிருப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்

🕔 October 9, 2022

லங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் 3.6 வீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி 1,717 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு உயர்ந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓகஸ்டில் 1,657 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த மாதம் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கியில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய ஒதுக்கங்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கக் கையிருப்புகளும் உள்ளன.

ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயர்ந்து, 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.

மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, உத்தியோகபூர்வ கையிருப்புக்கள் 2021 டிசம்பர் தொடக்கம் நிலையான சரிவைச் சந்தித்து வருகின்றன. சரிவுக்கு முன்னதாக இறுதியாக உத்தியோகபூர்வ கையிருப்பு 3,139 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டது.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பல் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஓகஸ்ட்டில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான வெளிநாட்டிலுள்ள பணியாளர்களின் பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் 359 மில்லியன் டொலரான அதிகரித்துள்ளது.

2022 ஜூலையில் பதிவான பணம் அனுப்பலுடன் ஒப்பிடுகையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்பல் 29% இனால் (80 மில்லியன் டொலரினால்) அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புலம்பெயர் பணியாளர்களின் பணம் அனுப்புதல் 2,574.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (43.8%) குறைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்