வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டில் தயாரிக்க தீர்மானம்: வருடாந்தம் 60 கோடி ரூபா அந்நியச் செலாவணி மிச்சமாகுமாம்

🕔 March 29, 2022

வாகன இலக்கத் தகடுகளை இலங்கையில் முதன்முறையாகத் தயாரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும் தொகையான பணத்தை சேமிப்பதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

உள்ளூர் தனியார் நிறுவனம் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும், வாகன இலக்கத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு காலாவதியடைகிறது. அதன் பின்னர் அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தினால் இந்த இலக்கத்தகடுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு வருடமும் சுமார் 500,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் வருடாந்தம் குறைந்தது 10 லட்சம் இலக்கத் தகடுகள் வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.

இந்நிலையில், சுமார் 600 மில்லியன் ரூபாவினை வெளிநாட்டுக்கு செல்லவிடாமல் சேமிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்