கொழும்பு வீட்டை மைத்திரிக்கு வழங்க எடுத்த தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு: பின்னணி என்ன?

🕔 March 29, 2022

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து 04 வாரங்களின் பின்னர் இந்த தடையுத்தரவு அமுலுக்கு வரும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தடை உத்தரவை வழங்கியது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு – மலலசேகர மாவத்தையில் (பேஜட் வீதி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லமானது பெரும் நிதிப் பெறுமதி உடையது எனவும் அது நாட்டுக்கு பெறுமதியான சொத்து எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச தலைவரின் பணிகளை மேற்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இவ்வளவு நிதி மதிப்புடைய பொதுச் சொத்தை ஒதுக்கீடு செய்வது பகுத்தறிவற்றது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்றும், மேற்படி இல்லம் அரச தலைவருக்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து ஓய்வுபெறும் ஜனாதிபதியின் நலன்கள் குறித்து அமைச்சரவை முடிவெடுப்பது தவறானது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசியலமைப்பின் 12(1) (சமத்துவத்திற்கான உரிமை) பிரிவின் கீழ் மனுதாரர்கள் மற்றும் இலங்கையின் குடிமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மேற்கூறிய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் மீறப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அந்த மனுவில் வாதிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்