இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு
இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் (SLSI) தரநிலைக்கு அமைய எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (15) அறிவித்துள்ளது.
அத்துடன், எரிவாயு கொள்கலனின் தரத்தை உறுதி செய்யும் ஸ்டிக்கர்ளும் அவற்றில் ஒட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நாளை மீள அழைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களை மீளப்பெறுமாறு, சிவில் செயற்பாட்டாளரான நாகாநந்த கொடிதுவக்கு முன்வைத்த நீதிப்பேராணை மனு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, எரிவாயு கொள்கலன்களின் உள்ளடக்கங்களின் செறிமானத்தை காட்சிப்படுத்தக்கூடிய இயலுமை தொடர்பில் நீதியரசர்கள் ஆயம் வினவியிருந்தது.
இந்நிலையில், லிட்ரோ நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய, இன்று மேற்படி விடயம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க லிட்ரோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.