
வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி மாநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்று, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
அமைச்சரும், மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அடிக்கடி ஒன்றுகூடி மீளாய்வு செய்வதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கண்டி நகர அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் உரிய செயல்திட்டங்கள் தொடர்பான வரைவுகளையும், தரவுகளையும் தயார்படுத்தி, அமைச்சர்களின் ஒன்று கூடலின்போது முன்வைக்க வேண்டுமெனவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.
மேற்படி சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை, முதலீட்டு ஊக்குவிப்பு சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



