பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

🕔 May 18, 2021

‘பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி காலனித்துவத்தின் விளைவாகும். இந்த பிராந்திய மக்கள் இறையாண்மையை இழந்த காரணத்தினால் மோதல் சூழ்நிலைகளுக்காக விதைக்கப்பட்டதை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையே அதிகரித்துள்ள பதற்ற நிலைமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான தற்போதைய மோதல்கள் காரணமாக அப்பிராந்தியத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.

இந்த மோதல் நிலை காரணமாக சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் நிலைமை அண்டைய பிராந்தியங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதால் முழு உலகிற்கும் பேரழிவு தரக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடும்.

இன்று பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி காலனித்துவத்தின் விளைவாகும். இந்த பிராந்திய மக்கள் இறையாண்மையை இழந்த காரணத்தினால் மோதல் சூழ்நிலைகளுக்காக விதைக்கப்பட்டதை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளர் என்ற வகையிலும் பலஸ்தீன ஒத்துழைப்புக் குழுவின் இலங்கைக்கான ஸ்தாபகத் தலைவர் என்ற ரீதியிலும் பலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும்.

விதிவிலக்கான மக்கள் என்ற வகையில் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மிக முக்கியமான பணியாகும்.

பலஸ்தீன பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காண்பதற்கு பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான பாதுகாப்பு தேவைகள் மற்றும் நியாயத்தன்மையைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது அத்தியவசியமானதாகும்.

இது போன்ற சூழ்நிலையில் நிம்மதியாக வாழ்வதற்கு பாதுகாப்பான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளலை இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மக்களினால் பேச்சுவார்த்தைகள் மூலம் அது நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பது இலங்கையின் நிலைப்பாடாகும்.

அத்தகைய பதற்ற சூழ்நிலையில் வெளிப்படும் உண்மை என்னவென்றால், இரு தரப்பினரும் முறையான அபிலாஷைகளை நோக்கி செயற்பட்டு நிலையான அமைதியை அடைய முடியும்.

இஸ்ரேல் – பலஸ்தீன பிராந்தியங்களுக்கு சொந்தமான பூமியானது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு புனிதமான இடமாகும் என்பது எனது உண்மையான நம்பிக்கையாகும்.

இதனால் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு மத்தியில் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டு விரோதப் போக்கை அதிகரிப்பதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு இரு தரப்பினரிடையேயும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்