கொரோனா நிபுணர் குழுவுக்குள் சர்ச்சை; உடல்களை அடக்க மறுப்பதை ஆட்சேபித்து பலர் ராஜினாமா

🕔 January 30, 2021

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு தொடர்ச்சியாக இருப்பதை ஆட்சேபித்து, அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய பல வைத்தியசர்களும், நிபுணர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

அரச சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின்னர், இவர்கள் ராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சமூக வைத்தியக் கல்லூரி மற்றும் ‘வைரலோஜிஸ்ட்’கள் கொரோனா  மரணம் தொடர்பாக தமது அறிக்கைகளை முன்வைத்துப்  பேசியதோடு, கொரோனாவினால் இறப்பவர்களை  தகனம் செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளமை பற்றி அங்கத்தவர்கள் பலர்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா. மற்றும் உலக சுகாதார  ஸ்தாபனம் என்பனவற்றின்  வழிகாட்டல்களுக்கு மாறாக  செயற்படுவதில் உள்ள பாதிப்புகளையும்  இவர்கள் எடுத்து விளக்கி உள்ளனர்.

அரச சட்ட வைத்திய அதிகாரிகளான  டொக்டர் சன்ன பெரேரா, களுத்துறை அரச சட்ட வைத்திய அதிகாரி டொக்டர்  சிறியானந்த அமரசேகர மற்றும் நீர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி  ஆகியோர்; கொரோனா தொற்றினால் இறப்பவர்களது சடலங்களை எரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளனர்.

தகனம் செய்வதற்கு  இணங்காத உறுப்பினர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டொக்டர் ஆனல்ட், பேராசிரியர் அஜித் தென்னகோன், பிரதம சட்ட வைத்திய அதிகாரி உட்பட பலர் தமது ராஜினாமாக்களை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றுக்கு மாற்றமாக செயற்படும்  குழு ஒன்றில் தமக்கு இருக்க முடியாதென, ராஜினாமா செய்த வைத்தியர்களும், நிபுணர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக நடைபெறும் வைத்திய அமர்வுகளிலும் சுகாதார மாநாடுகளிலும் தாம்  நிராகரிக்கப்படலாம் என இவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

19 பேரைக் கொண்ட குழுவில்  அதிகமானவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: நவமணி பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்