தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில்
– க. கிஷாந்தன் –
பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிகிச்சை பெற்று 22 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 08 பேர் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக மது அருந்திய மேற்படி நபர்கள், குடல்புண் காரணமாகவே சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அதேவேளை தீபாவளியை முன்னிட்டு மலையக நகர் பகுதிகளில் குறிப்பாக பொகவந்தலாவ, ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா மற்றும் நுவரெலியா போன்ற பெரும்பாலும் தழிழர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள மதுபானசாலைகளில் அதிகமான மதுபான வியாபாரம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.