கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

🕔 December 11, 2020

– சர்ஜுன் லாபீர் –

ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களும், தாதியர்கள் மூவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுனன் தெரிவித்தார்.

இதனையடுத்து, கொவிட் – 19 தொற்றுக்கா சிகிச்சையளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளர் எனவும் அவர் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்;

“கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இதுவரை 363 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்கள்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கும் பொத்துவிலிலிருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்த வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு நேற்று வியாழக்கிழமை அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் – 19 தொற்றாளாராக அடையாளம் காணப்பட்ட 80 வயதுடையவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் – 19 தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மிக விரைவில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வழமை போன்று சாதாரணமாக பொதுமக்களின் பாவனைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுச் சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் மிகச் சரியான முறையில் கடைப்பிடிக்காததனால்தான் கொரோனா தொற்று வெகுவாக தாக்குகின்றது.

இளைஞர்களையும், சுகதேகிகளையும் இந்த நோய் இலகுவாக கடந்து சென்றாலும் முதியவர்களையும், நாட்பட்ட வியாதிகளைக் கொண்டவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் இலகுவாக இந் நோய் தாக்குகின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்