அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு
– ஏ.எல்.எம். ஷினாஸ் –
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து கூறும் போது;
“அக்கரைப்பற்று சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று புதன்கிழமை எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து இன்று குறித்த பிரதேசத்துக்கு நேரடியாக சென்று சந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட 144 பேரிடத்தில் பெறப்பட்ட மாதிரிகளை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திய போது 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானமை அடையாளம் காணப்பட்டது.
இதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஊறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அக்கரைப்பற்று, ஆலயடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களை மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.
இதேவேளை கல்முனை பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு உட்பட்டபொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணை வரைக்குமான பிரதேசங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடுமாறும் பணித்துள்ளோம்.
இதேவேளை பொதுச்சந்தைகளையும் மூடி – தொற்று மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.