30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்
கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில், தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில்; இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.
இன்று தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என அவர் கூறினார்.
வைத்தியசாலைகளுக்கு வரும் கொரோனா நோய்க்கான அறிகுறிகளை உடையவர்களையும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்