றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்யும் பொருட்டு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்றிருந்த போதும், அவர் அங்கிருக்கவில்லை எனத் தெரியவருகிறது.
இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் வடக்கு மாகாண மக்களுக்கு, அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தேர்தலில் வாக்களிப்பதற்காக, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி போக்குவரத்து வசதியினை முன்னைய அரசாங்க காலத்தில் செய்து கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை சட்டப்படி கைது செய்யுமாறு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதனை அடுத்து, அவரை கைது செய்வதற்காக நேற்றைய தினம் அவரின் கொழும்பு மற்றும் மன்னார் இல்லங்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்றிருந்தனர்.
முன்னதாக றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான பிடியாணையொன்றினை வழங்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தனர். ஆயினும், பிடியாணை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே, சட்டப்படி முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனை கைது செய்யும்படி சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.