மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்
– பாறுக் ஷிஹான் –
கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர்.
மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலுக்கமைய கல்னை பொலிஸ் உத்தியோகத்தர்கள் – கார் ஒன்றில் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்று, கைத்தொலைபேசி ஊடாக சந்தேக நபரான செம்பகம் என அழைக்கப்படும் நபரை தொடர்பு கொண்டு கஞ்சா வாங்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது தொலைபேசியில் தொடர்பினை ஏற்ற சந்தேக நபர் கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை தம்முடன் எடுத்துக் கொண்டு கறுப்பு நிற வர்ணமுடைய வாகன இலக்கத்தகடு அற்ற பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழுவினர் – சந்தேக நபரை மடக்கி பிடித்ததுடன் 300 கிராம் நிறையுடையதும் பாடசாலை புத்தகத்தில் சுற்றிய நிலையில் 75 கஞ்சா பக்கேற்றுக்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 02 அடி வாள் கைத்தொலைபேசி மற்றும் டியோ ரக கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் மருதமுனை அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் எனவும் நாளை வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கல்முனை பொலிஸார் தெரவித்தனர்.