தலைப்புச் செய்திகள்

பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை   இடம்பெற்றது. இதனபோதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“கொரோனா நோயின் தாக்கத்தை தொடர்ந்து உண்மையில் அதிக உயிரிழப்புகளால் உலகமே உறைந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், முடிந்த அளவு இந்த பிரச்சனையிலிருந்து  எமது மக்களை காப்பாற்றுவதற்காக இயலுமானவரை முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

அந்த விதத்தில் உண்மையில் அரசாங்கம்  ஜனாதிபதியின் கீழ் அமைந்த செயலணி சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

அதேபோன்று சுகாதாரத்துறையினர் இன்னொருபுறம் வேலை  செய்து கொண்டிருக்கின்றார்கள். பொலிஸார்,முப்படையினர் என்று இன்னுமொரு தரப்பினர் சிறப்பாக வேலை செய்து வருகிறார்கள்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பகுதிகள் சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு  மேலாக உண்மையில் இந்த  ஊடக நண்பர்கள் அல்லது  அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் செய்திகளை மக்களுக்கு  காட்டிக் கொண்டிருக்கின்றது.

 நான் இதில்  பங்காற்றி கொண்டிருப்பவர்கள் அனைவரையும் உண்மையில் தலை வணங்குவதாக கருத்து தெரிவிக்க முடியும். அந்த வகையில்  அவர்கள் சிறப்பாக  செயற்பட்டு  கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் சில இடங்களில் நாங்கள் தடங்கல்களை காண்கின்றோம். அதாவது இந்த கொரோனா சம்பந்தமான செய்திகளை வதந்தியாக  பரப்புவதில் பதிவு செய்யப்படாத ஊடகங்கள் முன்னிற்கின்றன.

எனினும் உண்மையில் மக்கள் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்லது அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட  ஊடகங்களினால்  வழங்கப்படுகின்ற  ஊடக செய்திகளை மட்டும் நம்ப வேண்டும்.

அந்த வகையில் நாங்கள்  பதியப்பாடாது செயற்படுகின்ற ஊடகங்களையும், மக்கள் மத்தியில் நடமாடும் வதந்திகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்

செய்திகள் என்ற போர்வையில் பொய்யான செய்திகள், வதந்திகளை வழங்கி மக்களை சங்கடத்துக்குள் தள்ளி  சுகாதாரத் துறையை கூட ஆட்டம் காட்டக் கூடிய அளவுக்கு பதிவு செய்யப்படாத ஊடகங்கள்  மலிந்து விட்டன.

வதந்தியான செய்திகளை எந்தவிதமான தங்குதடையின்றி எழுதித் தள்ளுகிறார்கள். உண்மையில் இந்த காலத்தில் அனைவரும் பொறுப்பு மிக்கவர்களாக தங்களுடைய பெறுமதியை உணர்ந்தவர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

அந்த விதத்தில் இந்த  வதந்திகளை பரப்புகின்ற ஊடகங்கள் என கூறப்படும் விடயங்கள் எனக்கு முன் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து  ஜனாதிபதி  செயலகப் பிரிவுக்கு எங்களால் மிக விரைவில் முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது” என்றார்.