பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

🕔 January 22, 2020

பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே, எதிர்வரும்  பெப்ரவரி 25ம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அந்த வழக்கின் சந்தேக நபர்களான பிள்ளையான் உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு எம்.என். அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 25.12.2005 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் பிறப்பு நள்ளிரவு  ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம், ராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் மீரா லெப்பை கலீல் மற்றும் முன்னாள் ராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்