சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு ‘ஓடிய’ வேன், பிணையில் விடுவிப்பு

🕔 July 3, 2019

– பாறுக் ஷிஹான் –

யங்கரவாதி  சஹ்ரான்  குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் கைப்பற்றிய டொல்பின் ரக  வேன், அதன் உரிமையாளரிடம் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியது.

சாய்ந்தமருது பகுதியில் தற்கொலைக் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்னர், சஹ்ரான் குழுவினர்  வாடகை  வேன் ஒன்றில் பயணித்து, மீரி­கம  ஹந்­தா­முல்ல பகு­தி­யி­லுள்ள ஆடை விற்பனை நிலை­ய­மொன்றில் சிங்­களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களை  கொள்­வ­னவு செய்திருந்­தனர்.

இவ்வாறு  வாடகை மூலம் பெறப்பட்ட வேன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்த கொள்ளப்பட்ட போது, கடும் நிபந்தனைகளுடன் 50 லட்சம்  பிணையில், குறித்த வேன் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நிறைவுறும் வரையில், இந்த வாகனத்தின் ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்தல், வாகனத்தை  விற்பனை செய்தல்ஈ கைமாற்றுதல் மற்றும் உருமாற்றுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என, உரிமையாளரை இதன்போது நீதவான் எச்சரித்தார்.

சம்பந்தப்பட்ட வேன், அம்பாறை விசேட பொலிஸாரினால் இன்று காலை மன்றுக்குக் கொண்டு வரப்பட்டது.

இவ்வாகனத்தை சஹ்ரான் குழுவினருக்காக வாடகை அடிப்படையில் செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இன்று வரை வைக்கப்பட்டுள்ளார்.

இச்சாரதி தனது வாகனத்தை இன்னுமொரு தரப்புக்கு வாடகைக்கு வழங்கியதாகக் கூறி, இந்த வாகனத்தை அதிக விலையில் வாடகை கொடுத்து எடுத்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்