பேரினவாதத்தின் குறுக்கு வழி

🕔 May 29, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகியிருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டிருக்கிறார்கள். காடையர்கள் ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் தீட்டி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள், ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்படும் நிலை உருவாகியிருக்கிறது. ஆடை விவகாரம் தொடக்கம் அறபு மொழியைப் பயன்படுத்துகின்றமை வரை, அரசாங்கமே கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியிருக்கிறது.

மழுங்கடித்தல்

இவற்றினையெல்லாம் எதிர்ப்பதற்கான துணிவை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மழுங்கடிப்பதற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. பாண் வெட்டும் கத்தி வைத்திருந்தவர்கள் தொடக்கம், ‘சக்கரம்’ போட்ட சட்டை அணிந்த பெண் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையின் மூலம், உளரீதியானதொரு அச்சத்துக்குள் முஸ்லிம் சமூகம் தள்ளிவிடப்பட்டிருக்கிறது.

மறுபுறமாக, சூழ்நிலையைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பேரினவாதிகளின் கண்களுக்குள் உறுத்திக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பெரும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன், ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட சிலர் மீது, அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் போல் தெரியவில்லை. முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்ப்பதன் ஓர் அங்கமாகவே இதனை முஸ்லிம்கள் பார்க்கின்றனர். அதனால்தான் “றிசாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும்” என்று, நாடாளுமன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கின்றார்.

குறிவைக்கப்படும் றிசாட்

அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது – மிக நீண்ட காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இனவாதம் பேசிவரும் பௌத்த தேரர்கள்தான் அவற்றில் அதிகமான குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர். வில்பத்து காடுகளை றிசாட் அழித்து விட்டார் என்பது, அவற்றில் மிகப் பிரதானமான குற்றச்சாட்டாகும்.

எவ்வாறாயினும், றிசாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவையும் சட்ட ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘என்மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அரசியலில் இருந்தே ஒதுங்கி விடுவேன்’ என்று அமைச்சர் றிசாட் கூறிவருகின்றமையும் நினைவுகொள்ளத்தக்கது.

றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகளுகளுக்கு, அவர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் காரணமாகும் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான், சில அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள், றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரசாரங்களை பெரும் முன்னெடுப்பில் செய்து வருகின்றன.

இந்த நிலையில், றிசாட் மீதான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நிரூபிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரை, வேறுறொரு பக்கமாகச் சுற்றி வளைப்பதற்கு ஈஸ்டர் தினத் தாக்குதல் பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது. அதனால்தான், சுடச்சுட 10 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றனர்.

குறுக்கு வழி

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் இணைத்து – முஸ்லிம்களில் எவரையும் குற்றம்சாட்ட முடியும் என்கிறதொரு நிலைவரம் உருவாகி விட்டது. காரணம், அந்தத் தாக்குதலை நடத்திய முட்டாள் கூட்டத்தில் மௌலவி, சட்டத்தரணி, பெரும் பணக்காரர்கள் என்று – சமூகத்திலுள்ள முக்கிய அந்தஷ்திலுள்ள பலரும் இருந்துள்ளனர். அதனால்தான், இந்த நிலைவரத்தை வைத்து, ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி, அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களைப் பட்டியலிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினத் தாக்குதல் என்பது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிகக் கொடூரமான பயங்கரவாதச் செயற்பாடாகும். அதனுடன் தொடர்புபட்ட அனைவரும் இரக்கமின்றித் தண்டிக்கப்பட வேண்டும். உதாரணமாக, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்த்தரப்பினர் கூறுகின்றமை போல், பயங்கரவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் உதவி செய்திருந்தமை சந்தேகத்தக்கு இடமின்றி சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மிகப்பெரும் தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்.

ஆனால், பயங்கரவாதிகளுடன் றிசாட் பதியுதீனுக்கு தொடர்பு உள்ளது அல்லது பயங்கரவாதிகளை பாதுகாப்பதற்கு றிசாட் முயற்சித்தார் என்கிற சந்தேகம் இருக்குமாயின், அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் முறையானதாகும். அதை விடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவருக்கு எதிராக ஏன் கொண்டுவர வேண்டும் என்பதுதான், பலரிடமும் உள்ள கேள்வியாகும்.

அதுவும், முஸ்லிம் சமூகத்தின் மீது எல்லாத் திசைகளிலுமிருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டிருப்பதானது, முஸ்லிம் சமூத்துக்கு எதிரான, பேரினவாதச் செயற்பாடுகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
சட்ட ரீதியாக றிசாட் பதியுதீனைக் குற்றப்படுத்த முடியாதவர்கள், இப்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் அவரைப் பழி தீர்க்கப் பார்க்கிறார்களா என்கிற கேள்வியும், முஸ்லிம் மக்களிடம் உள்ளது.

அச்சம் தரும் விடுதலை

இப்படி, முஸ்லிம் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியிருக்கும் மிக மோசமானதொரு சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களையும், நடவடிக்கைகளையும் தலைமையேற்று மேற்கொண்டு வந்த, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடைப்படையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக 06 வருட கடூழிய சிறைத் தண்டனையை, கடந்த 09 மாதங்களாக ஞானசார தேரர் அனுபவித்து வந்தார். இந்த நிலையில், அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களும், செயற்பாடுகளும் நாடு முழுவதும் கொதிநிலையில் இருக்கின்றதொரு நேரம் பார்த்து, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டிருப்பது, பெரும் சந்தேகத்தினையும் உண்டுபண்ணியுள்ளது.

சிறைச்சாலையிலிருந்து வந்தவுடன்; “நான் சமயக் கடமைகளிலும், தியானத்திலும் ஈடுபட்டு வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன்” என்று கூறிய ஞானசார தேரர், இப்போது அவரின் பழைய ‘சாட்டை’யைக் கையில் எடுத்திருக்கின்றார். தான் தியானம் செய்து காலத்தைக் கழிக்கவுள்ளதாகக் கூறியதைக் கேட்ட இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்ளூ தான் ‘களத்துக்கு’த் திரும்பப் போவதாகக் கூறியுள்ளதோடு, முஸ்லிம்களை அச்சுறுத்தும் சில கருத்துக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

சவால்

இதேவேளை, ஞானசார தேரரை ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவித்தமைக்கு எதிராக கண்டனங்களும் எழுந்துள்ளன. தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது.

‘இலங்கையில் பௌத்தர்கள் அல்லாத ஏனைய மதத்தவர்கள் மீது வன்முறைகளை தூண்டிவிடும் இந்த தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிராக நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாத்திரமே அவர் சட்டத்துக்கு உட்பட்டு கையாளப்பட்டார்’ என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ‘இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றை கட்டுப்படுத்தி வைப்பதன் ஊடாக, எல்லா பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் ஒரு நாடு என்ற முன்னேற்றத்தை அடைவதற்கு, தேரரின் விடுதலையானது சவாலினை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, ஆளுநர்கள் ஆஸாச் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை விடுத்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கதாகும்.

ஜனாதிபதி – பொறுப்புதாரி

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அழுத்கம கலவரம் நடைபெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ஞனாசார தேரர் என்பதை எல்லோரும் அறிவர். அவ்வாறான ஒருவர் இப்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக எதையாவது செய்துவிடுவாரோ என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது. அவ்வாறு எதுவும் நடந்து விடக் கூடாது என்பதுதான் நல்ல மனிதர்களின் விருப்பமாகும்.

ஆனால், அதையும் மீறி ஞானசார தேரரின் வழிகாட்டுதலின் பேரில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் வன்முறைகள் ஏதாயினும் நடந்தால், அதற்கான முற்றுமுழுப் பொறுப்பினையும் ஜனாதிபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சுக்களும் உள்ளன.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்குக் காரணமானவர் ஜனாதிபதி. எனவே, வெளியில் வந்துள்ள தேரர் ‘நல்ல பிள்ளை’யாக நடந்து கொள்வதையும் ஜனாதிபதி உறுதி செய்தல் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது. அதை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

ஆனால், முஸ்லிம்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில், பொறுப்புவாய்ந்தவர்களில் கணிசமானோர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றமையினைக் காண முடிகிறது. அதிலும், தங்களின் வாக்காளர்களையும், தங்களுக்கான எதிர்கால வாக்குகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான், கணிசமான அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் விடயத்தில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் வீடு எரிகின்ற போது, அந்த நெருப்பில் பீடி கொழுத்திக் கொள்ளும் ஒருவனின் கேவலமான மனநிலை, அந்தக் கருத்துக்களில் வெளிப்படுவதை விளங்கிக் கொள்ள முடியும்.

இலங்கை – இலங்கையர்களின் நாடு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கிடையில்தான், நாமும் நமது பரம்பரைகளும் வாழப்போகிறோம் என்பதை நினைக்கும் போதுதான், ஏமாற்றமாகவும் சோர்வாகவும் உள்ளது.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (28 மே 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்