தலைப்புச் செய்திகள்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

Hakeem - vavuniya - 01‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறானவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா பிரதேசத்துக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், வவுனியா கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்போதே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

‘நீரில் கலந்துள்ள இரசாயன பாதார்த்தங்களை வேறாக்கி, நீரை சுத்தீகரிப்பதற்கு உதவும் ‘ஆர்ஓ’ என சுருக்கமாக குறிப்பிடப்படும் இயந்திரத்தையும், அதனுடன் தொடர்புபட்ட பொறிமுறைகளையும் சிறுநீரக நோய் அதிகம் காணப்படும் மாகாணங்களுக்கு விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தற்போழுது தேசிய நீர் வழங்கல் சபையூடாக 45 சத வீதமான மக்களுக்கு குடிநீர் வழங்கலை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதை 2020ஆம் ஆண்டுக்குள் 60 சத வீதமாக அதிகரிப்பதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடடுள்ளோம்.

வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் புழக்கத்திலுள்ள குடிநீரில் இரசாயன பதார்த்தங்களின் கலந்துள்ளன. இதனால், அந்நீரை அருந்துவோர் மத்தியில் சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவர்கள் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் மேற்கொள்ளவுள்ளோம். இச்செயற்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

புளோரைட் அதிகமுள்ள தண்ணீரின் கனதியை குறைப்பதனூடாகவும் தண்ணீரில் செறிந்துள்ள கல்சியத்தின் அளவை குறைப்பதனூடாகவும் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில், தூய நீரை வழங்குவது சாத்தியமாகும். தண்ணீரில் கலந்துள்ள கனிப்பொருள்களின் செறிவு சிறுநீரகத்தோடும், கல்லீரலோடும் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகின்றன.

குழாய் நீர் கிணறுகளின் உபயோகம் மற்றும் மழை நீரை தேக்கி வைத்து வறட்சி நிலவும் காலங்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம்.

முழு நாட்டிலும் குடிநீர் வழங்கலை 45 சத வீதம் வரையில்தான் இதுவரை பூர்த்தி செய்துள்ளோம். 2020 ஆம் ஆண்டளவில் இதை இன்னும் 15 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான பாரிய நீர் வழங்கள் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சிறுநீரக நோயினால் பதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு, அதற்கென்று பிரத்தியேகமான சுத்திகரிப்பு நீர் வழங்கல் திட்டங்களை வழங்கவும் நாங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதனடிப்படையில் சுத்திகரிப்பு இயந்திரங்களை பல இடங்களில் பொருத்தவுள்ளோம்.

நாங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில், இதுபோன்ற செயற்திட்டங்களை பிரத்தியேகமாக ஆரம்பித்து வைத்துள்ளோம்’ என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாறூக், அமைச்சின் மேலதிகச் செயலாளர், பிரதேச செயளாலர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Hakeem - vavuniya - 02Hakeem - vavuniya - 03