அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு

🕔 March 20, 2019

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம் உள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விண்ணப்பங்களிலிருந்து 79 பேரை, நேர்முகத் தேர்வுக்காக தெரிவு செய்துள்ளதாகவும், அமெரிக்கரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதகாவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இலங்கை குடிமக்கள் மட்டுமே, இந்த அலுகோசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதனாலேயே, அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, அலுகோசு பதவிகளுக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டபோதும், அவர்கள் எந்தவித அறிவிப்பும் வழங்காமல், இந்த பணியை விட்டு சென்றுவிட்டனர்.

இதேபோல மீண்டும் நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது; “தொழிலை விட்டுச் செல்பவர்களை தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும், அவ்வாறு நடந்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் அலுகோசு பதவிக்கு நியமிக்கப் படுவார்கள்” என்றும் அவர் பதிலளித்தார்.

அலுகோசு பதவிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் திகதி இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டு, நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு, அந்தத் தீர்ப்பை நிறைவேற்றப் போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் தெரிவித்ததை அடுத்து, அலுகோசு பணி செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்