நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி
– க.கிஷாந்தன் –
கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தைச் சேர்ந்த 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகிலுள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில், மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையிலுள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.