‘பில்’ கட்டாமல் நழுவி விட்டார்; மஹிந்த மீது குற்றச்சாட்டு
நாரேஹேன்பிட்டியிலுள்ள அபாயாராம பௌத்த விகாரைக்கு செலுத்த வேண்டிய 03 லட்சம் ரூபாய் பணத்தினை வழங்காமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோசடி செய்துள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மேற்படி விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், நாரேஹேன்பிட்டியிலுள்ள அபாயாராம விகாரையினை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியினர், தேர்தல் நடவடிக்கைக் காரியாலயமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதன்போது, விகாரைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றினையும் குறித்த தேர்தல் நடவடிக்கைக் காரியாலயத்தினை நடத்தியோர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனால், இந்த விகாரைக்கு, மின் மற்றும் குடிநீர் கட்டணமாக 03 லட்சம் ரூபாய் மேலதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில், அந்தப் பணத்தினை செலுத்தாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நழுவி விட்டார் என்று, நாரேஹேன்பிட்டி அபாயாராம பௌத்த விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவ ஆனந்த தேரர், ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.