தலைப்புச் செய்திகள்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம்

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள் தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது புதிதாக  கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் சிக்கல்கள் இருப்பது மிகவும் தெளிவானது. இதனை நாங்கள் அந்த நேரமே பல தடவை சுட்டிக்காட்டி இருந்ததோடு அதற்கு எதிராகவும் நாடாளுமன்றில் வாக்களித்திருந்தோம்.

நாங்கள் சுட்டிக்காட்டிய போதே சிறுபான்மை கட்சிகள் சிந்தித்திருந்தால், அதற்கு வாக்களிக்காமல் விட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

தேர்தல் ஒன்றை நடத்தினால் மஹிந்த ராஜபக்‌ஷ பெருவாரியாக வெற்றிபெருவார் அதனை தடுக்க எப்படியாவது தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என்கிற அரசாங்கத்தின் திட்டத்துக்கு  கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள், தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயமாகும்.

சமூக நலனை விட ஆட்சியையும் தங்கள் பதவிகளையும்  தக்கவைத்துக்கொள்வதே இவர்களின் நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது” என்றார்.