ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்?

🕔 March 13, 2018

– ஹபீல் எம். சுஹைர் –

முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விசேட அம்சம் என்னவென்றால் பிரதியமைச்சர் ஹரீஸு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் – மேல் எழுந்தமையாகும்.

அலசிப் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க, ஆர்வமூட்ட வேண்டிய விடயத்தை பேசியவருக்கு எதிராகஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பேச்சு, அங்கு எழுந்தது.

முஸ்லிம் சமூகத்துக்காக நாடாளுமன்றில் பிரதியமைச்சர் ஹரீஸ் கடந்த காலங்களில் குரல் கொடுத்ததை  யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மு.காவின் அடுத்த தலைவன் யார் என்ற வினாவுக்கு, அவருடைய பேச்சுக்கள் பதில் வழங்கிக்கொண்டிருந்ததன. இது கிழக்கு மாகாண மக்களுக்கு மிகவும் அவசியமான பதிலாகும். இதனை அமைச்சர் ஹக்கீமும் நன்கு அறிவார். இது மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீமுக்கு உசிதமானதல்ல. பிரதியமைச்சர் ஹரீசின் இவ்வாறான பேச்சுக்களின் மூலம் முஸ்லிம்களின் எதிரிகள் அஞ்சினார்களோ இல்லையோ, அமைச்சர் ஹக்கீம் நிச்சயம் அஞ்சியிருப்பார்.

ஹரீஸ் அவ்வாறு பேசியதன் பின்னர், அவரை மட்டம் தட்டும் சில செயற்பாடுகள் மு.காவில் நடைபெற்றிருந்தன. இது பற்றி அரசியல் களத்தில் ஆழமாக நீந்துவோர் நிச்சயம் அறிந்திருப்பர். சில காலம் அமைச்சர் ஹக்கீமுக்கும், பிரதியமைச்சர் ஹரீசுக்கும் இடையில் இடைவெளி ஒன்றும் ஏற்பட்டிருந்தது. அக் காலத்தில்தான், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்திருந்த கருத்தை, அவர் அருகில் இருக்கத்தக்க நிலையிலேயே அமைச்சர் ஹக்கீம் மறுதலித்து பேசியிருந்தார். இதன் பின்னர் ஹரீசும், தனது பேச்சிலுள்ள காரத்தை குறைத்திருந்தார். அதற்கு காரணம் பயம் அல்ல. தருணம் பார்த்து பாய்வதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டார்.

அண்மைக் காலமாக பிரதமர் ரணிலை பிரதி அமைச்சர் ஹரீஸ் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது விமர்சனங்களில் நியாயங்கள் நிரம்பி வழிகின்றன. அம்பாறை பள்ளி உடைப்பு தொடர்பாக பேசுவதற்கு, மு.கா அழைத்து வந்த பிரதமர், ஒலுவில் துறைமுகம் வந்து சென்றால், சமூகத்தின் மீது பற்றுக்கொண்டவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

ரணிலை ஒலுவிலுக்கு அழைத்து வந்தமையை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவமும், அவரைப் போன்ற சில போராளிகளும் பெரிய சாதனையாகக் காட்ட முனைந்தனர். அவர்களின் பிரச்சினைகள் வேறு. அது பற்றி – வேலை உள்ள நேரங்களில் பேசுவது வீணானது. அதற்குப் பிறகும் பிரதமர் ரணிலை பூசி மெழுகி வேலை இல்லை என்பதுதான் யதார்த்தமாகும்.  இதனை அறிந்து கொண்ட பிரதிமைச்சர் ஹரீஸ், யதார்த்தத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

பிரதமரின் ஒலுவில் வருகை தொடர்பான விமர்சனங்கள்  சமூக வலைத்தளங்களை ஆட்கொண்டிருந்தன. இவ்வாறான சிறிய அரசியல் சித்து விளையாட்டுக்களை கூட, முஸ்லிம்கள் புரிந்து கொள்ள இயலாத மடமைச் சமூகமல்ல. பிரதமரை மு.கவினரே அழைத்து வந்திருந்தமையால், பிரதமரின் இச் செயல் மு.கா.வினருக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியிருந்தது. அவமானத்தை குறைத்துக்கொள்ள மு.கா.வை சேர்ந்த சிலர், அதனை நியாயப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், பிரதியமைச்சர் ஹரீஸ்  பகிரங்கமாகவே, பிரதமர் ரணிலை விமர்சித்து ஊடகளுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதனை இனி யாரால் நியாயப்படுத்த முடியும்? முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலர்,  – தமிழ் ஊடகங்களில் அரசியல் செய்வதை போலல்லாது, நாடாளுமன்றத்திலும் அதே கருத்தை அச்சொட்டாய் தைரியமாய் ஹரீஸ் எடுத்துரைத்திருந்தார். அவரின் இந்த செயற்பாடுகள், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், நடுநிலையாளர்கள் பலரதும் நன்மதிப்பை தன் பக்கம் ஈர்க்க காரணமாக அமைந்திருந்தது. இது அமைச்சர் ஹக்கீமுக்கு உசிதமானதாக இருக்கவில்லை.

தனது தலைமைத்துவத்துக்கு ஹரீஸ் சவாலாக வருவார் என்ற விடயத்தில் மாத்திரமல்லாது, இது அமைச்சர் ஹக்கீமுக்கு பல வகையான தலையிடியை வழங்கியிருக்கும். மு.கா.வினரின் அரசியல் வாழ்வை, ஐ.தே.க.வினூடாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள அமைச்சர் ஹக்கீமுக்கு, பிரதமரை இகழ்வது பல வகையிலும் பாதகமானது. இப்படி செய்வதால் மக்களிடம் ஐ.தே.க.வின் செல்வாக்கு குறையும்.  அது மு.கா.வின் அரசியல் வாழ்வை கடுமையாக பாதிக்கும். பிரதமரிடம் மு.கா. நன்மதிப்பை இழக்கும். ஹரீஸின் கூற்று யாருக்கு? எப்படியமைந்தாலும், சமூகத்துக்கு அவசியமானதாகும். இக் காலத்தில், இவ்வாறான வெளிப்படை பேச்சுக்களே அவசியமானவை. இவை அனைத்தையும் எதிர்கொள்ள, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்தல் போதுமானதாகும்.

எப்படி என கேட்கின்றீர்களா? இந்நேரம் அமைச்சர் ஹக்கீம் – பிரதமரிடம் ஓடிச் சென்று; “ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்தேன், எதிர்ப்பு கிளம்பி விட்டது” என்பார். “சிறிது தாமதியுங்கள், நேரம் வரும்போது தலையில் தட்டுகிறேன்” என்று கூறியிருப்பார். வேறு வழி இல்லை, பிரதமரும் அமைச்சர் ஹக்கீமின் விசுவாசத்தை நம்பியே ஆக வேண்டும்.

இவ் விடயத்தில் பிரதியமைச்சர் ஹரீசின் முடியையும், யாராலும் அசைக்க முடியாது போனாலும், இதன் பிறகு ஹரீஸ் சற்று சிந்தித்தே உரையாற்றுவார். அவரின் பேச்சின் காரம் குறைந்துவிடும். இருந்தாலும் ஹரீசுக்கு கட்சியில் உள்ள  மதிப்பை, இன்று அமைச்சர் ஹக்கீம் அறிந்திருப்பார். இதன் பிறகு பிரதியமைச்சர் ஹரீஸ், தனக்கு எதிரான வாள் வீச்சுக்கு தயாராக வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அத்தோடு விவகாரம் முற்றுப்பெற்றிருக்கும்.

இந்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கதை, மு.காவின் செயலாளர் நிசாம் காரியப்பர் உட்பட சில முக்கிய நபர்களாலேயே முன் மொழியப்பட்டிருந்தது. உயர்பீடக் கூட்டத்தில் இக் கதை எழுந்தவுடனேயே ஹக்கீம் தட்டிப் பணித்திருக்கலாம். விவாதத்துக்கு விட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் காங்கிரசில் அவ்வளவு ஜனநாயகம் நிலவுகிறதா என்ன? இப்படியான ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான கதையை, அமைச்சர் ஹக்கீமுக்கு – முன் கூட்டியே தெரிவிக்காமல், இவர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றீர்களா?

அப்படியானால், இந்த ஒழுக்காற்று விவகாரம் எவ்வாறான பின்புலத்தைக் கொண்டது என்பதை, சற்றுச் சிந்தித்தால் – ஆழமாகப் புரிந்து கொள்ளலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்