தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும்

🕔 January 30, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதியமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதியசம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான் நாம் கவனிக்கத் தவறிய அதிசயங்களை நினைத்து பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஆனால், இந்த அதிசயங்களுக்கெல்லாம் ‘அப்பன்’ அதிசயமொன்று, நமது அரசியலரங்கில் நடந்திருக்கிறது. அது – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கத் தீர்மானித்திருப்பதாகும்.

தூசு படிந்த கதை

அட்டாளைச்சேனைக்கு 15 வருடங்களுக்கு முன்பிருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவேன் என்று, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கி வந்தார்.

2004 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க மேடைகளில் வாக்குறுதியளித்திருந்தார். அப்போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.காங்கிரசின் அமைப்பாளராகப் பதவி வகித்த மசூர் சின்னலெப்பைக்கு, மு.கா. தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், கடைசிவரை ஏமாந்த நிலையிலேயே, மசூர் சின்னலெப்பை மரணித்தார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் மேடைகளிலும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.கா. தலைவர் பகிரங்க மேடைகளில் மீளவும் வாக்குறுதி வழங்கினார். ஆனாலும் அந்த வாக்குறுதியின் மீது, அட்டாளைச்சேனை மக்களுக்கு இறுக்கமான நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும், அட்டாளைச்சேனை மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தனர்.

மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து கடந்த தேர்தல்கள் வரை, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் மு.கா.வுக்கு வீதாசார ரீதியில் அதிகளவு வாக்குகளை வழங்கி வருகின்ற ஒரு பிரதேசமாக அட்டாளைச்சேனை அடையாளம் பெற்று வருகிறது. எனவே, தேசியப்பட்டியலின் பெயரால் இரண்டு தடவை தாம் ஏமாற்றப்பட்ட பின்னரும், கட்சியின் மீதான அபிமானம் காரணமாக, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மு.காங்கிரசின் வேட்பாளர்களுக்கு அட்டாளைச்சேனை மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

பங்கு வைக்கப்பட்ட தேசியப்பட்டியல்

பொதுத் தேர்தல் நடைபெற்று சுமார் இரண்டரை வருடங்கள் கழியும் நிலையிலும் அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவேயில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்தன. அவற்றில் ஒன்றினை தனது மூத்த சகோதரருக்கும், அதனை மீளப்பெற்று திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக்குக்கும் மு.கா. தலைவர் வழங்கினார். மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தனது நண்பரும் கட்சியின் முக்கியஸ்தருமான எம்.எச்.எம். சல்மானுக்கு மு.கா. தலைவர் வழங்கினார்.

அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் பல தடவை மு.கா. தலைவரிடம் வேண்டிக் கொண்ட போதிலும் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை.

கண் விடுத்த தலைவர்

இவ்வாறானதொரு நிலையில்தான் உள்ளுராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கோலோச்சிய பல பிரதேசங்களில் அரசியல் நிலைமை மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.

மு.காங்கிரசிலிருந்து பிரிந்து வந்த பசீர் சேகுதாவூத், ஹசனலி அணியினர் அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்கள் முழுக்க மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ளது. இந்த நிலைவரம் முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்த சில உள்ளுராட்சி சபைகள், இம்முறை கைநழுவிப் போய் விடுமோ என்கிற பயம் மு.காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கப் போவதாக மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்திருக்கின்றார்.

கூடவே, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கவுள்ளதாகவும் மு.கா. தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், நசீருக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் உள்ளன என்பதை, இந்தப் பத்தியில் பல தடவை நாம் எதிர்வு கூறியிருந்தமையினையும் இங்கு நினைவுகொள்தல் பொருத்தமானதாகும்.

அச்சம் என்பதில்லை

இவை ஒருபுறமிருக்க, இத்தனை ஆண்டுகளாக அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படாத தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில் வழங்குவதற்கு மு.கா. தலைமை முன்வந்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை பாமரர்களும் அறிவார்கள். ஆனாலும், எதிர்க் கட்சியினர் மீதான அச்சம் காரணமாக, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தான் வழங்கவில்லை என்று, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது மு.கா. தலைவர் ஹக்கீம் கூயியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனைக்கு வழங்கிமைக்காக, மு.கா. தலைவருக்கு தமது நன்றியினைத் தெரிவிக்கும் வகையில் அங்குள்ள முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இருக்கு ஆனால் இல்லை

எவ்வாறாயினும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நசீரின் பெயர் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், அவரின் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். அதனால், அந்தப் பதவிக்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிக்குமறு, தேர்தல்கள் ஆணையாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் எழுதியதாகக் கூறப்படும் கடிமொன்றின் படமொன்று, சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

ஆனால், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நசீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை உத்தியோகபூர்மாக அறிவிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. அந்த அறிவித்தல் வெளிவந்து, சத்தியப் பிரமாணம் செய்யும் வரையில் நசீர் – நாடாளுமன்ற உறுப்பினரில்லை.

ஆனாலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர் என்றுதான் நசீரை மு.கா. தலைவர் உட்பட பலரும் பகிரங்க மேடைகளில் வைத்து, விளித்து வருகின்றனர். ஆனாலும், உத்தியோகபூர்வமாக நசீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் வரையில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் பிரமுகர்களில் அதிகமானோரின் மனதில், சொல்ல முடியாததொரு ‘திக், திக்’ இருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. கடைசி நிமிடத்தில் அட்டாளைச்சேனைக்கு இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காமல் போய் விடலாம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம்தான், அந்த ‘திக், திக்’ நிலைக்கு காரணமாகும்.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக மு.கா. தலைவர் உறுதியளித்து விட்டு, பின்னர் அதனை வழங்காமல் விட்ட மாதிரி, நசீருக்கும் நேர்ந்து விடுமோ என்கிற சந்தேகம் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு உள்ளது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமை போன்ற ஒரு கடிதத்தினை ஹசனலியிடம் வழங்கிய மு.கா. தலைவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கப் போவதாக உறுதியளித்தார். ஹசனலியை அழைத்துக் கொண்டு, தேர்தல் ஆணையாளரிடம் மு.கா. தலைவர் சென்ற போதும், அதனை உறுதிப்படுத்திக் கூறியிருந்தார். கடைசியில், சல்மான் ராஜிநாமா செய்வதாக எழுதிய கடிதம் மட்டுமே ஹசனலிக்கு கிடைத்தது. தேசியப்பட்டியலின் பெயரால் ஹசனலி நம்ப வைத்து ஏமாற்றப்பட்டார்.
இந்தக் கசப்பான அனுபவம் நசீருக்கும் நடந்து விடுமோ என்கிற அச்சம், நசீருடைய அபிமானிகள் பலரிடமும் உள்ளது.

இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. தலைவர் ஹக்கீம்ளூ ‘பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினராக நசீர் சத்தியப் பிரமாணம் செய்வார்’ என்று அறிவித்துள்ளார்.

சட்டப் பிரச்சினை

இது ஒரு புறமாக இருக்க, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, சட்டப்படி நசீர் பெற்றுக் கொள்ள முடியாது என்கிற பிரசாரமொன்று, மிகத் தீவிரமாக உலவி வருகின்றமை குறித்தும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, கட்சியொன்றின் தேசியப்பட்டியல் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் அல்லது அந்தக் கட்சி சார்பாக அப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் மாத்திரம்தான், அந்தக் கட்சிக்குரிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த வகையில், மேற்படி இரண்டு நிபந்தனையினையும் பூர்த்தி செய்ய முடியாதவராக நசீர் உள்ளார். எனவே, நசீருக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்பதுதான், மேற்சொன்ன பிரசாரத்தின் சுருக்கமாகும்.

இது தொடர்பில், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்டிடம் வினவினோம். அவர் விளக்கம் தந்தார். ‘மேற்சொன்ன நிபந்தனைகளில் ஒன்றினை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை முதலாவதாகப் பெற்றுக் கொள்ளும் நபர் ஒருவர் பூர்த்தி செய்திருத்தல் அவசியமாகும். ஆனால், முதலாவதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டவர் அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காக பெயர் குறித்து அறிவிக்கப்படும் நபர், மேற்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற எந்தவித தேவையும் கிடையாது’ என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் முகம்மட் விபரித்தார்.

எனவே, தேசியப்பட்டியலில் நசீருடைய பெயர் இல்லை என்பதோ, கடந்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் நசீர் போட்டியிடவில்லை என்பதோ, தற்போது தேசியப்பட்டியலைப் பெற்றுக் கொள்வதற்கு தடையாக, நசீருக்கு இருக்கப் போவதில்லை.

லஞ்சம்

எது எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது, தேர்தல் கால லஞ்சமாகும் என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

வாக்குகளை பெறுவதற்காக, அல்லது யாராருக்காயினும் வாக்குகளை வழங்காமல் செய்வதற்காக வழங்கப்படும் அனைத்து விதமான அன்பளிப்புகளும் தேர்தல் கால லஞ்மாகவே கருதப்படுகிறது. அவ்வாறாயின், 15 வருட காலமாக அட்டாளைச்சேனைக்கு வழங்காமல் ஏமாற்றப்பட்டு வந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சித் தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அட்டாளைச்சேனைக்கு வழங்கப் போவதாக மு.கா. தலைவர் அறிவித்துள்ளமைக்கான நோக்கம் என்ன என்கிற கேள்விகள் பலமாக எழுகின்றன.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ளவர்களின் வாக்குகளைக் குறி வைத்து, அந்த ஊருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை என்று நிரூபிக்க முயற்சிப்பது ஏமாற்று வேலையாகும்.

யார் தவிசாளர்

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பலருக்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக வேண்டும் என்கிற பாரிய கனவுகள் உள்ளன. சில வேட்பாளர்கள் இந்த ஆசையினை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் யானைத் சின்னத்தில்தான் மு.காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் சிலவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் மு.கா. வெற்றி பெற்றாலும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எவருக்கும் பிரதேச சபைத் தவிசாளர் பதவியினை மு.கா. தலைவர் வழங்க மாட்டார் என்பதை இப்போதே அனுமானித்து கூற முடியும். காரணம், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ள நிலையில் (மு.கா. தலைவர் கூறியமை போல், 08ஆம் திகதி நசீர் சத்தியப் பிரமணம் செய்து விட்டார் என்று நினைத்துக் கொள்வோம்), அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவியினையும் அட்டாளைச்சேனைக்கு வழங்க மு.கா. தலைவர் விரும்ப மாட்டார்.

எனவே, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் மு.கா. வெற்றி பெற்றால், பிரதேச சபைத் தவிசாளர் பதவியினை பெற்றுக் கொள்வதற்கு அப்பிரதேசத்திலுள்ள பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய இரண்டு ஊர்களும் முயற்சிக்கும். ஆனால், அந்தப் பதவியை மு.கா. தலைவர் எந்த ஊருக்கு வழங்குவார் என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.

பாலமுனைக்கு அதிஷ்டம்

பசீர் சேகுதாவூத், ஹசனலி அணியுடன் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி வந்தவர்களில் பாலமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் முக்கியமானவர். இவர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் – ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். அன்சிலை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் போட்டியிடும் வட்டாரத்திலிருந்து மு.கா. சார்பாக ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, மு.கா. தலைவர் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அன்சில் போட்டியிடும் வட்டாரத்தில் மு.கா. சார்பில் களமிறக்குவதற்கான வேட்பாளர் ஒருவரை இறுதி செய்யும் பொருட்டு, கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பாலமுனைக்கு மு.கா. தலைவர் வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தத் தேர்தலில் அன்சில் வெற்றி பெற்றால், அன்சிலுடன் எதிர் அரசியல் செய்யும் பொருட்டு, அவரின் சொந்த ஊரான பாலமுனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கே அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் பதவியினை மு.கா. தலைவர் வழங்குவார் என்பதற்காக சார்த்தியங்கள் அதிகமாக உள்ளன. இதன்போது, ஒலுவில் கிராமம் மு.கா. தலைவருடன் முரண்படும். அதனை எதிர்கொள்வதென்பது மு.கா. தலைவருக்கு ஒரு பிரச்சினையாக இருக்க மாட்டாது.

பிந்திய கதை

எது எவ்வாறிருந்தாலும், அட்டாளைச்சேனைக்கு வழங்குவதாக மு.கா. தலைவர் அறிவித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானதுளூ ‘வரும், ஆனா வராது’ என்கிற நிலையில்தான் உள்ளதாக எதிர்த்தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சவால்களுக்கு மத்தியில், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இனியும் வழங்காமல் விட்டு, அந்த ஊரைப் பகைப்பதற்கு ஹக்கீம் விரும்ப மாட்டார்.

எனவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனை நிச்சயமாக அனுபவிக்கும் என்று நம்பலாம்.

ஆனால், அது – எத்தனை காலத்துக்கு என்கிற கேள்வியொன்றும் உள்ளது.

‘என்ன இது புதுக்கதை’ என்று யாரும் கேட்பீர்களாயின், அரசியல் அரங்கில் உலவும் மிகப் பிந்திய ‘கதைகள்’ குறித்து நீங்கள் அறியவில்லை என்று அர்த்தமாகும்.

அந்தக் ‘கதைகள்’ குறித்து வேறொரு தடவை பேசுவோம்.

நன்றி: தமிழ் மிரர் (30 ஜனவரி 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்