மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு

🕔 January 5, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்)  கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அவருக்கு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால், அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும், உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜனவரி 03ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று, நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவரை இடைநிறுத்தியுள்ளதாக குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் அவர்களுக்கு, கட்சியின் செயலாளர் எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் அவர்களுக்கு, செயலாளர் அனுப்பிய கடிதத்தில், கல்முனை மாநகரசபையில் ஐ.தே.க. சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகவும், தீவிரமாகவும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் உச்சபீடம் அவருக்கெதிராக மேற்கொள்ளவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து உரிய காலத்தில் அவருடன் தொடர்புகொள்ளப்படும் என்றும் செயலாளர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், கட்சி உறுப்பினர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் என்ற முறையிலோ பிரதி, பொருளாளர் என்ற முறையிலோ தம்மை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று, குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் அவர்களுக்கு செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாகவே, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் ஜவாத் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்து.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர், தமிழ் டயஸ்போராக்களுடன் இணைந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பதாலேயே, மு.காங்கிரசிலிருந்து தான் விலகியதாகவும் அப்போது ஜவாத் ஊடகங்களுக்குக் கூறியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

(மு.காங்கிரஸ் ஊடக பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்