இலங்கையில் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர்: டொக்டர் சிசிர லியனகே தகவல்
இலங்கையில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதியினரில், ஆண் ஓரின சேர்க்கையாளர்களே அதிகம் உள்ளனர் என்று, தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்ட பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் சுமார் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 12 லட்சம் பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 280 பேர், எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் டொக்டர் லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேற்படி 280 பேரில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும், மேற்படி எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் எனவும் டொக்டர் லியனகே சுட்டிக்காட்டினார்.
உடலுறவில் ஈடுபடும்போது ஆணுறை பயன்படுத்தாமையினால்தான், பால்வினை நோய்கள் பரவுவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் குணாகல் மாவட்டங்களில் காணப்படுவதாகவும் டொக்டர் லியனகே தெரிவித்தார்.