மு.காங்கிரசுக்குள் என்னை ‘டம்மி’யாகவே வைத்துள்ளனர்; கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹ்யாகான்
– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதில் பங்கேற்றிருந்த – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி. யஹ்யாகான், அங்கிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
மேற்படி கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதே, யஹ்யாகான் வெளிநடப்புச் செய்தார்.
கல்முனை மாநகரசபைத் தேர்தலின் போது, மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பது எனும் விடயத்தில், ஒருவருக்கொருவர் அடிபிடிப்படும் நிலைமை அங்கு உருவானமையினாலேயே, கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமை விட்டும், தான் வெளியேறியதாக யஹ்யாகான் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நெருக்கமாகப் பலர் உள்ளனர். அவர்களால் எனக்கு தடங்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் எனக்குள் தோன்றியிருந்தது.
எமது கட்சியில் உள்ள சில பழையவர்கள், தாங்களே ‘கோம்பை’ சுமக்க வேண்டுமென்று திரிகிறார்கள். என்னைப் பயன்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது. என்னை அவர்கள் ஒரு ‘டம்மி’யாகவே வைத்துள்ளனர். நான் எனது மனவேதனைகளை இன்று யாரிடம் சொல்வது?
கல்முனை மாநகர சபையின் மேயர் வேட்பாளராக என்னை நியமித்திருந்தால், சாய்ந்தமருதுவில் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்திருப்பேன்” என்றார்.