தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது

🕔 October 23, 2017

ரிசித் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, அவசரமாக மேலும் இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை உள்ளடக்கிய விஷேட கேள்விப்பத்திர சபை, அரிசிக்கான சர்வதேச திறந்த கேள்வி மனுக்கோரலை மேற்கொள்ளும் எனவும், இம்மாதம் 31 ஆம் திகதி விலை மனுக் கோரலுக்கான முடிவு திகதி எனவும் கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

90,000 மெட்ரிக் தொன் நாடு, 60,000 மெட்ரிக் தொன் சம்பா மற்றும் 50,000 மெட்ரிக் தொன் வெள்ளை பச்சரிசி உள்ளடங்கலாக, இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.  

திறந்த முறையில் சர்வதேச ரீதியில் இந்த விலைக் கோரல் இடம்பெறுகின்ற போதும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலேயே அரிசி பெருமளவில் இருப்பதனால், இந்த நாடுகளில் இருந்தே குறித்த தொகையிலான அரிசி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பகிரங்க முறையில் இந்த கேள்விச் சந்தை இருப்பதனால், பிற நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தனியார் துறையினர் இந்த வர்த்தகச் செயன்முறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியில், ஒரு லட்சம் மெட்ரிக் தொன் நவம்பர் 31ஆம் திகதிக்குள்ளும், எஞ்சிய ஒரு லட்சத்தை டிசம்பர் 31 ஆம் திகதிக்குள்ளாகவும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் குறித்த கொள்ளளவிலான அரிசியை, தமது அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமே பொறுப்பேற்குமெனவும் அவர் கூறினார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்