பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகளை விடவும், மாவட்டத்துக்கு அதிகம் செய்வேன் என்கிறார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்

🕔 August 1, 2015

Ismail - 098
– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் உபவேந்தராக, தான் பதவி வகித்த காலப் பகுதியில் செய்த சேவைகளை விடவும், பன் மடங்கு சேவையினை, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் செய்வேன் என்று, அ.இ.ம.காங்கிரசின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். கலாநிதி இஸ்மாயில் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

தென்கிழக்கில் வாழும் மக்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை முடிவுக்குக் கொண்டுவரும், எனது வேலைத்திட்டம் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை விரைவில் வெளியிடவுள்ளேன்.

கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற சில உறுப்பினர்கள், இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆனால், இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேய, இத்தேர்தலில் நான் களமிறங்கியுள்ளேன்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த காலத்தில் – பல்கலைக்கழகத்தினுள்ளும் வெளியேயும் பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளேன். நாடாளுமன்றம் செல்வதற்கு, மக்கள் ஒரு சந்தர்ப்பம் தருவார்களென்றால், அதைவிடவும் பலமடங்கு சேவைகளை, அம்பாறை மாவட்டத்தில் மட்டுமன்றி, முழு நாட்டுக்கும் செய்வேன்.

நீண்ட காலமாக சிறந்த ஒரு வேட்பாளர் இல்லாததன் காரணமாக, சம்மாந்துறை பிரதேசம் தனக்கான நாடாளுமன்ற உறுப்பினரை இழந்து வந்துள்ளது. அந்த வெற்றிடத்தை என்னால் நிரப்ப முடியும். எனது பின்னால் நாளாந்தம் அலையலையாக மக்கள் திரண்டுவருகின்றனர்.

இப்போது ஏற்பட்டுள்ள சிறந்த வாய்ப்பை, சம்மாந்துறை மக்கள் உட்பட அம்பாறை மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.  அம்பாறை மாவட்டம் முழுவதும் மயிலின் ஆட்டம் களைகட்டியுள்ளது. எங்கள் கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரைப் பெறக்கூடிய வாய்ப்பு, ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. இரண்டாவது உறுப்பினரை பெறுவதற்குத்தான் நாங்கள் முயற்சிக்கின்றோம் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்