மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு, மக்களை ஏற்றி இறக்குவதற்காகவே, மேற்படி பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பஸ்களுக்கான வாடகையாக, 192 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், 50 மில்லியன் ரூபாவினை உரிய தரப்பினர் செலுத்தியிருந்த நிலையில், மிகுதியாகவுள்ள 142 மில்லியன் ரூபா, இதுவரை செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.
எனவே, மிகுதிப் பணத்தினை செலுத்தத் தவறிய – ஐ.ம.சு.முன்னணியிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை வழங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டங்களுக்கு, ஆட்களை ஏற்றி இறக்குவதற்காக, சில நாட்களில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 600 தொடக்கம் 700 பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.