கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ
ஐக்கிய தேசிய கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், கருத்துக் கூறுவதற்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், நீதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
எனினும் தன்னால் அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது எனக்கூறி அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் ஒரு சில செயற்பாடுகள் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்தை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.