ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கும் போது சகலருடைய நேர்மை தொடர்பிலும் அறிந்து கொள்ள முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரளிப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளனர. ஆனால், நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் சட்ட ரீதியான பிரச்சினை இருப்பதாக சபை முதல்வர் கூறியுள்ளார். இது வெட்கப்பட வேண்டிய விடயம்.
சில சமிக்ஞைகளுக்கு அமைய வேலை செய்யும் நபர்களின் தேவைக்காக, நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதைத் தவிர்க்கப் பார்க்கின்றனர்.
மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கையளிக்கும் போது, அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும். அதில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது குறித்து பின்னர் கவனம் செலுத்தலாம்” என்றார்.