பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

🕔 July 20, 2017

– கே.ஏ. ஹமீட் –

ல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார்.

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநரை, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சந்தித்தனர். இதன்போது, தொழில் ரீதியாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டபோதே, மேற்படி உறுதிமொழியினை ஆளுநர் வழங்கினார்.

கல்முனை – திருகோணமலை போக்குவரத்துப் பாதையில் தனியாருக்கு சொந்தமான 21 பஸ்வண்டிகளும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 14 பஸ் வண்டிகளுமாக, மொத்தம் 35 பஸ் வண்டிகள் மிக நீண்டகாலமாக சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், இதே பாதையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பொருட்டு, இரண்டு சொகுசு பஸ்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள, கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், மேற்படி இரண்டு பஸ்களுக்குமான அனுமதியினை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக, தமது பஸ்களுக்குரிய வருமானம் – மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என, குறித்த பஸ்களின் உரிமையாளர்கள் அங்கம் வகிக்கும், தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலருக்கு, எழுத்து மூலம் புகார் தெரிவித்திருந்தனர். ஆயினும்;, பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகள இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கல்முனை – திருகோணமலை வீதியில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக, மேலும் 05 பஸ்களுக்கு, கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையினர் நேற்று புதன்கிழமை அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் சார்பாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை, கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து, தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் முறையிட்டதோடு, இது தொடர்பில் எழுத்து மூலமான கடிதமொன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் எம்.எஸ். பைறூஸ் கருத்துத் தெரிவிக்கையில்ளூ “கல்முனை – திருகோணமலை வீதியில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பொருட்டு, ஏற்கனவே இரண்டு பஸ்களுக்கு முறையற்ற ரீதியில் அனுமதி வழங்கியமை காரணமாக, எமது தொழில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று புதன்கிழமை மேலும் 05 பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவ் விடயங்களை நாங்கள் ஆளுநரிடம் தெரிவித்தோம்.

எமக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஆளுநருடன் 30 நிமிடங்களுக்கும் மேலாக நாம் பேசினோம். அவருடனான சந்திப்பு எமக்கு நம்பிக்கையளிக்கிறது. எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்