அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

🕔 July 18, 2017

 

– சுஐப். எம். காசிம் –

ரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள் தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

01 மெற்றிக்தொன் நாட்டரிசியை 425 டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கு முன்னர்,  ஒரு கிலோ அரசியின் இலங்கை பெறுமதி 65.31   ரூபாவாகும்.

இலங்கைக்கு ஏற்கனவே மியன்மார் அரசு 30 மெற்றிக்தொன் ஆயிரம் வெள்ளைப்பச்சை அரிசியை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. 01 மெற்றிக்தொன் அரிசியை 290 டொலருக்கும் 350 டொலருக்கும் இடைப்பட்ட விலைகளில் வழங்குவதற்கும் அந்த நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் செப்டம்பர் மாதமளவில் நாட்டரிசியை வழங்கவும் மியன்மார் உறுதி அளித்துள்ளது என  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசும் 25ஆயிரம் மெற்றிக்தொன் வெள்ளைப்பச்சை அரிசியை வழங்குவதற்கு முடிவு செய்துள்ள போதும்; இறக்குமதி செய்யும் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் இரண்டு நாடுகளுக்குமிடையே தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் 01 லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

மியன்மார், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி சீராக நடைபெற்ற பின்னர், இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இருக்காது என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்