பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு
🕔 July 13, 2017
– க. கிஷாந்தன் –
கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதனால் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகள் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதன்போது, புகையிரதத்தின் நான்கு பெட்டிகள் குடைசாய்ந்துள்ளன.
இந்த விபத்தினால் கொட்டகலை அறுபது அடி பாலத்திலிருந்து, ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் வரை தண்டவாளத்தில் பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதுவேளை, புகையிரத பெட்டிகளின் பாகங்கள் இரும்புடன் மோதி வீதியின் இரு புறங்களிலும் வீசி எறியப்பட்டுள்ளன.
இவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வரும் புகையிரதங்கள் ஹட்டன் வரையும், பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும், சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளன. இதனையடுத்து, மேற்படி புகையிரதங்களில் வரும் பயணிகள், இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் பயணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது துரித கதியில் பாதையை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.