மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா – பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் மிக அதிகளவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மரண தண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என்று, மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.



