ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என அறிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயகொடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவுவதும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் குற்றமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல் கைது செய்யப்படுவார்கள் எனவம் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஞானசார தேரரைப் பிடிப்பதற்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், சில நாட்களுக்குள் அவர் கைது செய்யப்படுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையிலேயே, ஞானசார தேரர் குறித்து தகவல் அறிந்தோர், பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.