சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ்
சமூக வலைத்தளங்களினூடாக இனவாதத்தைத் தூண்டிவிடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இனவாத சம்பவங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெறும் பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி, அதற்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.
இனவாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு, நாட்டிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுரை வழங்கியுள்ளார் என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் சுற்று நிருபமொன்றினை பொலிஸ் மா அதிபர் அனுப்பி வைத்துள்ளார் எனவும் பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.
மதங்களுக்கிடையில் வெறுப்புக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தூண்டிவிடும் நபர்கள் மற்றும் குழுக்களை அடையாளம் காணுமிடத்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.