பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல்

🕔 May 31, 2017

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார். 

பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு மருத்துவச் சான்றிதழ் அனுப்பும் அதியமும் கூட, இந்த நல்லாட்சியிலே நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தாங்கள் வளர்த்த கடா மார்பில் பாய்வதால் நல்லாட்சியாளர்கள் இப்போது வாயடைத்துப் போய் நிற்கின்றார்கள். ஞானசார தேரர் நல்லாட்சியாளர்களின் பங்காளியாவார். அவரை ஏவி விட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை முஸ்லிம்களிடமிருந்து  பிரிக்க சதி செய்யப்பட்டதாக நாம் அன்று தொடர்ச்சியாக கூறி வந்தோம். அன்று எம்மை விமர்சித்தவர்கள் இன்று நிர்வாணமாக நிற்கிறார்கள்.

பொதுபலசேனா காரியாலய திறப்பு நிகழ்வுககு கோட்டாபய ராஜபக்ஷ சென்றமை தொடர்பில், அவர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

பௌத்த தேரர்கள் காரியாலயம் ஒன்றை அங்குரார்பணம் செய்ய  அழைத்தார்கள். பாதுகாப்பு செயளாலர் என்ற வகையில் நான் அங்கு சென்றேன். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நான் அறிந்த பின்னர், அவர்களுடன் எந்த தொடர்பையும் நான் வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது இதனையும் விமர்சித்தவர்கள் இன்று ஞானசார தேரரை நல்லாட்சி பாதுகாக்கின்றது என்பதை கண்கூடாக கண்டுகொண்டுள்ளனர்.  மஹிந்த அரசாங்கத்தில் ஞனசார தேரரை பாதுகாத்த அதே சக்திதான் இந்த அரசாங்கத்திலும் அவரை பாதுகாக்கின்றது.

அவ்வாறு பாதுகாக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான பல உண்மைகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட பல சதிகளையும் ஞானசார தேரர் வெளியிட வேண்டி நிலை ஏற்படலாம். அதனால், பலருடைய முகத்திரைகள் கிழியும் என்பதே இதன் பின்னால் உள்ள மர்மமாகும்.

ஞானசார தேரருக்கு  மஹிந்த ராஜபக்‌ஷவும் கோத்தாபய ராஜபக்‌ஷவும் அடைக்கலம் வழங்கியதாக கூறியவர்கள் இன்று நிர்வாணமாகி நிர்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்